Thursday, February 1, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 1


கவிஞர் சில்லையூர் செல்வராஜன்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (வருமானவரிக்காரர்கள் தான்) நடாத்திய ஒரு பிரம்மாண்டமான தமிழ் விழாவில், கவியரங்கத்தில் பங்குபற்ற வந்திருந்த கவிஞர்களிடையே, பட்டுவேட்டி, ஜிப்பா, சரிகைச் சால்வையடன், பென்சில் கீற்று மீசையுடன், அசப்பில் ஒரு சினிமா நட்சத்திரம் போல ஒருவர் எழுந்து நின்று , இனிய குரலில் "தேனாக.." என்று தொடங்கி, "சில்லாலை என்ற சிற்றூரில், நிலவில், முற்றத்து மணலில், அம்மா தன் கைவிரல்கள் பற்றி, ஆனா, ஆவன்னா எழுதியது" பற்றி கவிதைவரிகளில் சொன்ன அந்த நிமிடமே நான் அவரை என் ஆதர்சத்துக்கு உரியவராக்கிக் கொண்டேன்.

ஒரு வெளிநாட்டவரின் தனியார் விளம்பர நிறுவனத்தில் சில்லையூரார் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார்.

சில்லையூரார் "ஜிங்கிள்ஸ்" (Jingles) என்ற விளம்பர வாசகங்களை அற்புதமாக கவி நயத்தடன் உருவாக்குவார். உதாரணத்துக்கு ஒரு ஆங்கில வாசகம் - Upali நிறுவனத்தின் Unic றேடியோவுக்கான விளம்பரம் , இவ்வாறு உப்பு சப்பில்லாமல் வரும் -
In electronic engineering unic is matchless

அதற்கு சில்லையூரார் இவ்வாறு தமிழில் எழுதியிருந்தார் - மின்னியக்க பொறிவன்மையில் தன்னிகரற்றது யுனிக்" - சொல்லிப்பாருங்கள்.
அந்தச்சந்தத்தின் அழகு ஒரு விளம்பரவாசகத்தில் கூட வந்து பொருந்தியிருப்பதைக் காணலாம்.

சில்லையூராரிடம் இருந்த நூல் சேகரிப்பு பிரக்யாதிபெற்றது. இலங்கையில் வெளியான நூல்கள், சஞ்சிகைகள் என்பனவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி வைத்திருந்தார். பல சிறுகதை எழுத்தாளர்கள் தாங்கள் சிறுகதைத்தொகுதிகள் வெளியிடும்பொழுது, தவறவிட்ட தங்களுடைய சிறுகதைகளை இந்த சேகரிப்பில் இருந்து பெற்றுக் கொண்ட சம்பவங்கள் எனக்குத் தெரியும்.
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி என்ற நூல் எழுதுவதற்கு அவருடைய சொந்த சேகரிப்புத்தான் தூண்டியிருக்கவேண்டும்.

ஒரு முறை சில்லையூராரிடம் கேட்டேன்- "உங்கள் வீட்டு இலக்கம் ஞாபகத்தில் இருக்க மறுக்கிறதே..என்ன செய்யலாம்"
அவர் சொன்னார் - "ஏழேழு தலைமுறைக்கும் என் புகழ் மங்காது என்று ஞாபகம் வைத்துக்கொள்"
அவரது வீட்டின் இலக்கம் - (7X7) 49/7

ஷேக்ஸ்பியரின் நாடகமான ஜூலியஸ் சீசரில் , புறூட்டஸ், மார்க் அன்ரனி இருவரும் , சீசரின் மரணச்சடங்கில் பேசுகின்ற பகுதியை மொழிபெயர்த்திருந்தார். ஒருமுறை அந்தப்பகுதியை அந்த இரண்டு பாத்திரங்களின் குணாதிசயங்களை வேறுபடுத்திக்காட்டும் வகையிலே எனக்கு அற்புதமாக நடித்துக்காட்டினார். நான் கண்ணீர் விட்டேன்.

சில்லையூரார் உண்மையில் "பல்கலைவேந்தராகவே" திகழ்ந்தவர். கவிஞர், எழுத்தாளர், மேடை நடிகர், திரைப்படநடிகர் (ஆங்கில திரைப்படங்கள் உட்பட), வானொலி தயாரிப்பாளர், பாடகர், கூத்துக்கலைஞர்- இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சில்லையூரார் தனது கவிதைகளை தானே உரைத்திட "கவிதைச்சிமிழ்" என்ற ஒலிப்பேழை ஒன்று வெளியிடப்பட்டத.

தணியாத தாகம் கலைஞர்கள்













நிற்பவர்கள் (வலமிருந்து இடம்) வி.என்.மதியழகன், ஆர்.எஸ்.சோதிநாதன், கே.எம்.வாசகர், எஸ்.வாசுதேவன், கே.எஸ்.பாலச்சந்திரன், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், கே.மார்க்கண்டன், எம்.கே.ராகுலன், கே.சந்திரசேகரன், எஸ்.ஜேசுரட்னம், எஸ்.மயில்வாகனம், எஸ்.எழில்வேந்தன், எஸ்.சிவசுந்தரம், என்.கே.தர்மலிங்கம்
இருப்பவர்கள் (வலமிருந்து இடம்) சசி பரம், யோகா தில்லைநாதன், சந்திரப்பிரபா மாதவன், கே.எஸ்.நடராஜா(வானொலி தமிழ் நிகழ்ச்சி தலைவர்), விஜயாள் பீற்றர், ஷாமினி ஜெயசிங்கம், செல்வநாயகி தியாகராஜா, மொறின் கனகராயர்

அவரது தயாரிப்பில் மக்கள் வங்கி விளம்பர நிகழ்ச்சியாக வந்து வெற்றி பெற்ற " கோமாளிகள் கும்மாளம்" ஏறக்குறைய இரண்டாண்டுகள் ஒலிபரப்பாகி முடிவடைந்த நேரம். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அவரே எழுதிய "தணியாத தாகம் " என்ற திரைப்படச்சுவடி (Film Script) நூல்வடிவில் வெளிவந்திருந்தது. தற்செயலாக அந்த நூலை பம்பலப்பிட்டி கிறீன்லண்ட்ஸ் புத்தகக்கடையில், பார்த்த நான் ஆவலுடன் வாங்கி வாசித்த பிறகு, அதையே அடுத்த தொடர்நாடகமாகச் செய்யலாம் என்று அவருக்குசொன்னேன். ஒரு நகைச்சுவை நாடகத்துக்கு பிறகு, ஒரு சோகமயமான நாடகம், அதுவும் யாழ்ப்பாணத்தமிழில் எடுபடுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. நான் விடவில்லை. செய்து பார்ப்போம் என்று விடாப்பிடியாக நின்றேன். "கோமாளிகள் கும்மாளத்தில்" முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்கள் எவரும் இல்லாமல் புதிய நடிகர் குழாம் ஒன்று தெரிவாகியது.

கே.எஸ்.பாலச்சந்திரன்(சோமு), விஜயாள் பீற்றர்(யோகம்), கமலினி செல்வராஜன்(கமலி), கே.மார்க்கண்டன்(மாமா), செல்வநாயகி தியாகராஜா(மாமி), வாசுதேவன்(குமார்), ஷாமினி ஜெயசிங்கம்(சோமுவின் காதலி), எஸ்.கே. தர்மலிங்கம்(அப்பா), யோகா தில்லைநாதன்(அம்மா), எஸ். ஜேசுரட்னம், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், எஸ்.எழில்வேந்தன் என்ற புதுக்குழு களமிறங்கியது.


தொடர் நாடகம் ஆரம்பித்து சில வாரங்களில், எராளமான நேயர்கள் வானொலி நிலையத்திறகும், மக்கள் வங்கி முகவரிக்குமாக பாராட்டுக்கடிதங்கள் எழுதத் தொடங்கினார்கள். சோமுவும், தங்கைகள் யோகம், கமலி இருவரும் தங்களின் உடன்பிறப்புகளாக நினைத்து, அவர்களின் துன்பங்களுக்காக கண்ணீர் விட்டு, சந்தோசங்களில் மகிழ்ச்சி அடைவதாக அந்தக்கடிதங்கள் வந்தன. நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் ஞாயிறு தோறும் நாலரை மணிக்கு வீடுகளில், தோட்டங்களில், வயல் வரப்புகளில், டிரான்ஸிஸ்டர் ரேடியோக்களோடு காத்திருக்கிறோம் என்றார்கள்.


யாழ்ப்பாணம் சென்ற கொண்டிருந்த இ.போ.ச பஸ் ஒன்று ஞாயிறு 4.30க்கு " அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே..கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே" என்று ஆரம்பப்பாடல் ஒலிக்க, பஸ்ஸில் இருந்த பிரயாணிகளின் ஏகோபித்த வேண்டுகோளுக்க இணங்க, திருநெல்வேலி தேனீர் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டு , தணியாத தாகம் கேட்கப்பட்டதாக யாரோ சொல்லக்கேட்டு ஆனந்தமடைந்தோம்.


யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு அபிமான நேயர், "சோமு"வின் குடும்பகஷ்டத்தை பொறுக்கமுடியாமல் 100ரூபாவுக்கான காசோலையை அனுப்பியிருந்தார். தெல்லிப்பளையிலிருந்து மூன்று சகோதரிகள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை நீண்ட கடிதங்களில் எழுதி அனுப்பினார்கள். நாடகத்தை வானொலி ஏற்றவகையில் மாற்றி எழுதி வழங்கிய கே.எம்.வாசகர் , முடிவிலே இந்த சகோதரிகளின் விருப்பபடி சிறு மாற்றம் ஒன்றைச் செய்யும் அளவிற்கு அவர்களது பங்களிப்பு இருந்தது.


இத்தொடர்நாடகத்தின் இறுதிக்காட்சி ஒலிப்பதிவு செய்யப்பட்டபொழுது, யோகத்தின் மரணஊர்வலக் காட்சியில் நாங்கள் எல்லோரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தடுமாறினோம். நீண்ட நாட்களாக அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடமுடியாமல் தவித்தோம். இப்படி ஒரு வானொலி நாடகம் நிறைவெய்தியது.

1 comment:

கரவைக்குரல் said...

உங்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுவது மிகச்சந்தோசம்
இதனூடாக கரவெட்டியின் சிறப்புக்களையும் அதில் நீங்க பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்த்து கொள்ளலாமே
இது சிறியோனின் விண்ணப்பமே