Sunday, February 4, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 3


சிறுகதை எழுத்தாளர் அ.முத்துலிங்கம்


இந்திய சஞ்சிகையான "கல்கி" எந்த ஆண்டில் "ஈழத்துச்சிறுகதைப்போட்டியை நடத்தியது என்று எனக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும், அந்த சிறுகதைப்போட்டியின முடிவுகளை. ஆவலுடன் பார்த்திருந்து வாசித்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.அந்தப்போட்டியில் பரிசுபெற்ற சிறுகதைகள் முதல் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொண்ட கதைகள் வரை எல்லாவற்றையும் படிததேன். ஆனால் அவற்றுள்ளே என் மனதில் இடம்பிடித்த கதை - அ.முத்துலிங்கத்தின் "அனுலா" என்ற இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதைதான்.


ஒரு இளைஞனாக இந்தச்சிறுகதையை நான் வாசிக்க, வாசிக்க என் இதயத்தில் ஆழமாய் பதிந்துபோனது. மனப்பாடமாக ஆகுமளவிற்கு பலமுறை வாசித்திருப்பேன். இக்கதையின் ஓட்டம், முக்கிய பாத்திரத்தின் குணாதிசயங்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அந்தப்பாத்திரம் எனது அபிமானத்துக்குரிய (இரக்கத்துக்குரிய?) அனுலாவை வேதனைக்கு உள்ளாக்குவதை நான் பரிபூரணமாக வெறுத்தேன். கடைசி வசனம் கூட எனக்கு இன்றுவரை ஞாபகத்தில் இருக்கிறது "இன்னும் எத்தனை நாளைக்கு உன்னிடம் இப்படி யாசிக்கப்போகிறேன்".....விளக்கு எப்போது அணைந்தது...ஒரு துளிகூட காற்று வீசவில்லையே.

யாழ்ப்பாணத்தில் தொடங்கி ரொறன்ரோ வரை.. எத்தனை மைல்கள்..எத்தனை ஆண்டுகள் அவரை தேடிக் களைத்து, எதிர்பாராமல் ஸ்காபரொவில் முதன்முதலாக சந்தித்த வேளையிலே இந்த வசனத்தை அவருக்கு மறக்காமல் சொன்னேன். அவர் சற்று நேரம் பேசாமல் இருந்தார்.

அந்தப்போட்டியிலே "அனுலா"தான் முதல் பரிசைப் பெற்றிருக்கவேண்டுமென்பதுதான் எனது அசையாத முடிவு. கல்கியில் "அனுலா"வை வாசித்த நாள் தொடக்கம் அதன் படைப்பாளியின் மிகச்சிறந்த ரசிகனாக நான மாறி விட்டேன். அவருடைய "அக்கா" சிறுகதைத்தொகுப்பை முதன்முறையாக வாங்கிய பொழுத (பின்னர் பல பிரதிகள் வாங்கினேன்.) நான் அவருடைய ரசிகர் மன்றத்தில் சேர்ந்த மாதிரித்தான். ஏன் அப்படி ஒரே சிறுகதைத்தொகுப்பின் பல பிரதிகளை வாங்கினேன் என்று நீங்கள் யோசிக்கலாம்.- என் நண்பர்கள் ஒவ்வொரு முறையும் அதை இரவல் வாங்கிவிட்டு திருப்பிதராமல் விட்டு விடுவார்கள்.

யாழப்பாணத்தில் ஒரு மறக்கமுடியாத நாளிலே, நான் கடைசிமுறையாக "அக்கா" சிறுகதைத் தொகுதியை வாங்க முனைந்து தோறறுப்போன கதையை இனிச் சொல்கிறேன்.. அன்று 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் ஆரம்பிக்கும் என்று இருந்தது. நான் எனது பஜாஜ் ஸ்கூட்டரில் எனது இணுவில் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். கன்னாதிட்டி சந்தியைக் கடக்கும்போது ஒரு புத்தகக்கடையின் அலமாரியில், மிகவும் பரிச்சயமான புத்தக அட்டை மாதிரி - நீலமும், பச்சையும் கலந்த அழகான மயில் இறகு மாதிரி தெரிந்தது - ஆமாம்..அது அக்கா சிறுகதைத்தொகுதிதான்.. ஊரடங்கு நேரம் நெருங்கி விட்டதினால் அடுத்த நாள் வந்து சிறீலங்கா புத்தக நிலையத்தில் - அதுதான் பெயர் - புத்தகத்தை வாங்கலாம் என்ற முடிவுடன் எனது பயணம் தொடர்ந்தது.

ஆனால் சோகம் என்னவென்றால் நான் அடுத்தநாள் அங்கே போனபொழுது "அக்கா"வின் கடைசிப்பிரதி இருக்கவில்லை. கடை ஊழியர்கள் என்னை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டெ அலமாரிகள் முழுவதும் தேடிப்பார்த்தார்கள். இல்லவே இல்லை.
"இருந்தது..நான் கண்டேன்" என்று சொல்லிக்கொண்டு நிற்கும் என்னை அவர்கள் சறறு வித்தியாசமாக பார்க்கத்தொடங்க நான் அங்கிருந்து புறப்பட்டேன்.
அதன்பிறகு, யாழ்ப்பாணததில் தொடர்ந்த பிரச்சினைகளினால்;, நாங்கள் நேசித்த இணுவிலை விட்டு குடும்பமாக,கொழும்பு வரநேர்ந்தது. "அக்காவை" அத்தோடு தற்காலிகமாக மறந்து போனேன்.

கொழும்புக்கு வந்தபின்னர், எனது அபிமான எழுத்தாளர் எங்கிருக்கிறார் என்று விசாரிக்க, அவர் ஐ.நா வில் வேலை செய்கிறார்...நாடு, நாடாக பறந்து திரிகிறார் என்று சொன்னார்கள். எனது வலைப்பதிவில் கூட,அவரது ஈ-மெயில் விலாசம் தெரிந்தால் சொல்லுங்கள் என்று குறிப்பு ஒன்று போட்டேன். எந்த பலனுமில்லை. ஏறக்குறைய கனவாய், பழங்கதையாகப் போய்விட்டது.

பிறகு ஒருநாள், ஸ்காபரோவில் இலக்கியச் சந்திப்பு ஒன்றுக்கு, எந்தவிதமான இலக்கிய அந்தஸ்தும் இல்லாத எனக்கும் அழைப்பு வந்ததினால் போயிருந்தேன்.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக வந்தவர்கள் எல்லோரையும் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்தச் சொன்னார்கள். வட்டமாகச்சொல்லிக்கொண்டே வந்து, ஒரு இடத்தில் "நான் முத்துலிங்கம்.. சிறுகதை எழுத்தாளன்" என்று மெல்லிய குரலில் யாரோ சொல்லிக்கேட்டது. அவ்வளவுதான். என் அபிமான எழுத்தாளரைத் தேடிய என் தேடல் முற்றுப்புள்ளி அடைந்தது.


நாங்கள் நெருங்கியவர்களானோம். அவர் தனது கையொப்பமிட்ட "அ.முத்துலிங்கம் கதைகள்" என்ற தொகுதியை அன்பளிப்பாக தந்து உதவினார். நான் தொலைத்த அத்தனை "அக்கா" சிறுகதைத் தொகுதிகளுக்கும் மேலானதாக அது இருந்தது.

"அனுலா"வின் படைப்பாளிக்கு மிகப்பெரிய நன்றி.

No comments: